வாக்கு கேட்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ.வை ஊருக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிய மக்கள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் செல்வக்குமார் சின்னையனுக்கு ஆதரவாக பொன்னுசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பள்ளபாளையம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது அவர் வரும் செய்தி அறிந்து ஊர் மக்கள் சிலர் எல்லையில் நின்று கொண்டிருந்தனர். தங்கள் ஊருக்கு வந்த பொன்னுசாமியை அப்படியே எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நல்லதங்காள் நீர்த்தேக்கத்தில் இருந்த நீரை திறந்து விட்டதால் வாக்கு கேட்டு எங்கள் ஊருக்குள் வரக் கூடாது என்று அவர்கள் பொன்னுசாமியிடம் தெரிவித்தனர்.
தங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள் பொன்னுசாமியை திரும்பிப் போகுமாறு கூறினர். இதையடுத்து அவர் வேறு வழியின்றி தனது ஆதரவாளர்களுடன் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டார்.