சீட் வாங்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... அதிமுக எம்.எல்.ஏவின் ஜலபிரதட்சணம்...
மதுரை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு ஆள் ஆளுக்கு பால்குடம், தீச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து அமர்களப்படுத்த சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏவோ தண்ணீரில் மிதந்தபடி பிரார்த்தனை செய்துள்ளார். இது முதல் முறையல்ல கடந்த 1997ம் ஆண்டில் இருந்து இப்படி பிராத்தனை செய்து வருகிறாராம் இந்த எம்.எல்.ஏ.
ஆயுஷ் ஹோமம், மகா சண்டியாகம், தங்கத்தேர், வெள்ளித் தேர் இழுத்தல் என ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக அமைச்சர்களும், அதிமுகவினரும் கவன ஈர்ப்பு பிராத்தனைகள் செய்து வருகின்றனர்.
இதுவும் அப்படி ஒரு கவன ஈர்ப்பு பிராத்தனைதான். மதுரை தமுக்கம் மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு இன்று காலை வந்த சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா, தண்ணீரில் மிதந்தபடி முதலமைச்சர் ஜெயலலிதா நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
நாளைய தினம் பிப்ரவரி 24ம் தேதி 68வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கத்துடன் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி கருப்பையா பிரார்த்தனை செய்தார்.
ஜெயலலிதா படம் போட்ட டி சர்ட் அணிந்து தண்ணீரில் படுத்திருந்த எம்.எல்.ஏ கருப்பசாமி, அவரது வாயில் அதிமுகவின் கொடியையும் கவ்வி பிடித்திருந்தார். நீச்சர் குளத்தை சுற்றியும் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர். ( அது இல்லாமலா?). எம்.எல்.ஏவின் இந்த தண்ணீர் பிராத்தனையை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர். ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் அம்மா வாழ்க என்று முடித்துக்கொண்டார்.
இதே போல் 19 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக அதிமுக கருப்பையா இந்த வினோத வழிபாடு நடத்தி வருகிறாராம்.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது சோழவந்தான் கோயில் கிணற்றுக்குள் அரை நாள் மிதந்தார்.
ஏன் இப்படி தண்ணீரில் மிதந்து பிராத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டால், இது ஜல பிரதட்சணம் என்கிறார் கருப்பையா. 1997 முதல் 19 ஆண்டுகாலமாக ஜெயலலிதா பிறந்தநாளுக்கு ஜல பிரதட்சணம் செய்து வருகிறாராம்.
கீழே பூமா தேவி நடுவில் கங்காதேவி மேலே ஆகாயம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் பிராத்தனை செய்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. அதன்படி இந்த பிராத்தனை செய்தேன். அம்மா நீண்ட நாட்கள் பூரண ஆயுளுடன் வாழ்ந்தால்தான் எங்களைப் போன்றவர்களுக்கு முகவரி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
கை காசு செலவில்லாமல் அம்மாவின் கவனத்தை கவரும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதில் கில்லாடிதான் இந்த எம்.எல்.ஏ. இப்படி செய்தாலாவது கட்சித்தலைமையின் கடைக்கண் பார்வை பட்டு இவருக்கு இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கிறதா பார்க்கலாம்.