டி.டி.வி.தினகரன் அடக்கமானவர்.. சொல்கிறார் அதிமுக எம்.எல்.ஏ. சரோஜா
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அடக்கமானவர் என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா இன்று அறிவித்தார். மேலும் டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கினார் சசிகலா.
இந்நிலையில் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக பெண் எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டம் குறித்து நன்கு அறிந்தவர் என்றும், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் குறித்து கருத்துத் தெரிவித்த ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா, துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என தெரிவித்தார்.
தினகரன் கட்சிக்கு புதிதானவர் அல்ல என்றும் அவருக்கு திடீரென பொறுப்பு கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பே அதிமுக மாநில பேரவை செயலாளராகவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தினகரன் இருந்துள்ளார் எனவும் சரோஜா கூறினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டதால் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.