அச்சம் என்பது மடமையடா... எம்.எல்.ஏக்கள் முன் எம்ஜிஆர் பாட்டு பாடிய சசி
அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் 128 பேரும், கூட்டணி கட்சியினர் 3 எம்.எல்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. சசிகலா தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் 131 பேர் பங்கேற்றதாக அக்கட்சியின் நிர்வாகியும் எம்.எல்.ஏவுமாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓபிஎஸ் எழுப்பிய கலகக் குரலால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. சசிகலாவிற்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதை அறிவதற்காக அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்க சற்று முன்பு போயஸ் தோட்டத்தில் இருந்து ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வந்தார் சசிகலா. வழக்கமாக இரு விரல் காட்டி கையசைத்து விட்டு கூட்டத்திற்கு சென்றார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்புதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சசிகலாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். இரு தினங்களில் சசிகலாவும், ஒ.பன்னீர் செல்வமும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னர் தற்போதுவரை 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவிர அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 128பேர் பங்கேற்றனர்.
கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 128 பேர் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் என 131 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்பு பேசிய சசிகலா, நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினார். ஜெயலலிதாவின் ஆசி, சக்தி நம்மிடையே இருக்கிறது என்று கூறினார். பேசி முடிக்கும் போது அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று எம்ஜிஆர் பாடலை பாடி முடித்தார். கூட்டம் முடிந்த பின்னர் தலைமை அலுவலகத்தில் போயஸ் கார்டனுக்கு கிளம்பினார்.