10 நாட்களுக்கு பின் விடுதலை… கூவத்தூரில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்
10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பலத்தை நிரூபிக்க இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று அங்கிருந்து புறப்பட்டனர். சுமார் 31 கார்களில் அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். கூவத்தூர் செல்லும் போகும் போது பேருந்தில் சென்ற அவர்கள் அனைவரும் கார்களில் திரும்பி வந்தனர்.
அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்த 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர் இன்று சட்டசபையில் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க நிலையில் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு நேராக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஒரு காரில் 3 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சர் என்கிற அடிப்படையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். முதலில் பேருந்தில் அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கோவை வடக்கு எம்எல்ஏ அருண்குமார் சசிகலா அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வந்துவிட்டதால், அவசர அவசரமாக அமைச்சர்களே நேரடியாக எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அழைத்து வர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.