வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளத்தை வழங்குவர் - ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அளிப்பர் என்று கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மழை- வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் பெரிய பணியில் தமிழக அரசு முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. வரலாறு காணாத வகையிலும், திடீரென்று ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழை-வெள்ளப் பெருக்கும் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகள் ஏராளம். நன்றி-பாராட்டு: நிவாரணப் பணிகளுக்கு தன்னலமின்றி அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர் என்பது பாராட்டுக்குரியது.

அதிமுகவினரும் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும், கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவர். "நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே (மக்களுடன்) இருப்பேன்-கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
எவ்வளவு கிடைக்கும்? சட்டப் பேரவையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் அதிமுகவைச் சேர்ந்த (பேரவைத் தலைவர் உட்பட) 151 பேர் உள்ளனர். மேலும், தேமுதிகவைச் சேர்ந்த 8 பேரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறாக, அதிமுகவுக்கு ஆதரவாக 160 பேர் உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத ஊதியம் ரூ.8 ஆயிரமாகும். வாகனப்படி, தொலைப்பேசி படி உள்ளிட்ட படிகள் சேர்த்து மாதம்தோறும் ரூ.55 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல், அதிமுகவுக்கு மக்களவையில் 37 பேரும், மாநிலங்களவையில் 12 பேரும் என 49 பேர் எம்.பி.க்கள் உள்ளனர். எம்.பி.யின் மாத ஊதியம் ரூ.50 ஆயிரம். இதர படிகள் தனி. இவ்வாறாக, எம்.எல்.ஏ.க்கள் 160 பேர் தலா ரூ.8 ஆயிரம் என ரூ.12.80 லட்சமும், எம்.பி.க்கள் 49 பேரும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.24.60 லட்சமும் என ரூ.37.40 லட்சம் வழங்குவர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications