முத்துக்கருப்பன் எம்.பி. ராஜினாமா கடிதம் நிராகரிப்பு... மீண்டும் ராஜினாமா இல்லை என பல்டி!
அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் திடீரென பல்ட்டி அடித்துள்ளார்.
Recommended Video
டெல்லி : அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் திடீரென பல்ட்டி அடித்துள்ளார். முதல்வர் பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கூறியதால் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று முத்துக்கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ராஜினாமா செய்வதன் மூலம் எந்தப் பலனும் இருக்காது என்று அதிமுகவினர் தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் இன்று காலையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவிற்கான விளக்கத்தை கடிதம் மூலம் எழுதி அதனை செய்தியாளர்களிடம் காட்டிவிட்டு குடியரசுத் துணைத்தலைவரிடம் அளித்தார். முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தில் தவறுகள் இருப்பதாகச் சொல்லி அவருடைய ராஜினாமா நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே ராஜினாமா நிராகரிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முத்துக்கருப்பன் எம்.பி, மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்குமாறு கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். காலையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கருப்பன் முதல்வர் சமரசம் பேசி ராஜினாமா செய்யவிடமாட்டார் என்பதால் போனை ஆஃப் செய்துவிட்டதாகவும், ஜெயலலிதா கொடுத்த பதவியை மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.