முதல்வர் ஜெ. உடல்நலம் பற்றி பேசினா நாக்கை வெட்டுவேன்... அ.தி.மு.க. எம்.பி.யின் சர்ச்சை பேச்சு
ராசிபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பேசுபவர்களின் நாக்கை வெட்டுவேன் என்று நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. எம்.பி சுந்தரம் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
ராசிபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சுந்தரம் பேசியதாவது:
எத்தனை பேர் சி.எம். வேட்பாளர்கள்
தமிழகத்தில் எத்தனை பேர் முதல்வர் போட்டிக்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை. பா.ம.க., கோவையில் மாநாடு நடத்தி, அன்புமணிதான் முதல்வர் என்கிறது.
கோவையில் களை கட்டிய மதுவிற்பனை
டாஸ்மாக்' கடையை மூடுவோம் என்கின்றனர். ஆனால், கோவையில் மாநாடு நடந்த தினத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
நாக்கை வெட்டுவேன்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன். இனிமேல் யாராவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்.
இவ்வாறு சுந்தரம் எம்.பி. பேசினார்.
அமைச்சர் எதிர்ப்பு
இக்கூட்டத்தில் பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, எதிர்க்கட்சிகள் தான் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். அவர்களை போல் நாமும் பேசக் கூடாது. சுந்தரம் எம்.பி., பேசியதில் எனக்கு வருத்தம் உள்ளது. அரசியல் நாகரீகம் அறிந்து நாம் பேச வேண்டும் என்று கண்டித்தார்.