காவிரி மேலாண்மை வாரியம் அமைய திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வேண்டிக்கொண்டேன்: சரத்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைய திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வேண்டிக்கொண்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்: காவிரி மேலாண்மை வாரியம் அமைய திருநள்ளாறு சனீஸ்வர பகவான் மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில்களில் வேண்டிக்கொண்டதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று காரைக்கால் வந்தார். அங்கு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்டா பகுதி விவசாயிகள் காவிரி நீரையே நம்பி இருக்கிறார்கள். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலிலும் வேண்டிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும், ராஜினாமா செய்யாவிட்டாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருதல் அல்லது மற்ற கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானதிற்கு ஆதரவு தெரிவித்தல் என ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் கொடுத்தாக வேண்டும் என்று சரத்குமார் குறிப்பிட்டார்.