'அம்மா' படத்தை மடியில் வைத்து ஜோக்கடித்து சிரித்த செயலாளர்... சீக்கிரமே "செட்டில்மென்ட்"?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்காக நடத்தப்பட்ட ருத்ர யாகத்தில் அதிமுக நகரச் செயலாளர் ஒருவர் நகைச்சுவை சொல்லி சிரித்த சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவரும் அ.தி.மு.க நகரச் செயலாள ருமான அருணாச்சலம் வீடு அருகே புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கே சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டி ருத்ரயாகம் நடத்தப்பட்டது.
அப்பொழுது கட்சியினர்கள் அனைவருக்கும் ஜெயலலிதாவின் படங்கள் வழங்கப்பட்டு தங்களது மடியில் வைத்து வேண்டி வழிபட்டனர். கட்சியினர்கள் எல்லோரும் ஜெயலலிதாவுக்காக மீது மிகுந்த பயபக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால், நகர செயலாளர் அருணாச்சலம் மட்டும் ஜெயலலிதாவின் படத்தை தனது மடியில் வைத்த நேரம் முதல், கடைசி வரை கிண்டல் அடித்து சிரித்து கொண்டே காணப்பட்டார். இதனை கண்ட அ.தி.மு.கவினர் எரிச்சலுடன் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் அருணாச்சலம் கிண்டல் அடித்து சிரித்த அந்த புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளதால் மற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை அ.தி.முக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க தலைமைக்கு சம்மந்தப்பட்ட அந்த புகைப்படத்தையும் புகாரையும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து அருணாச்சலம் மீது பல விதமான புகார்களை அ.தி.மு.க தரப்பில் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு வருவதால் அருணாச்சலம் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முத்துப்பேட்டை அ.தி.மு.கவினர்கள் சலசலக்கின்றனர்.