தன்னார்வலர்களின் வெள்ள நிவாரண பொருட்களை தங்கள் கணக்கில் காட்டும் அதிமுகவினர்
சென்னை: எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல... வெள்ளத்தில் உடமைகளை இழந்து விட்டு உயிரை மட்டுமே மிச்சம் வைத்துள்ள மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லும் நிவாரண பொருட்களை அதிமுகவினர் பறித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் சீரழிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்துள்ளனர். லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் கூட ஒரே நாள் இரவில் தெருவிற்கு வரவேண்டியதாயிற்று.
ஏழை, பணக்காரன் என்ற எந்தவித வித்தியாசமும் இன்றி ஒரு பாக்கெட் பிஸ்கெட்டிற்காகவும், ஒரு பாட்டில் குடிநீருக்காவும் எங்கித்தவித்தனர். மக்களின் வேதனையை அறிந்த பலரும் உணவுகளையும், குடிநீரையும், பிஸ்கெட்டுகள், ரொட்டி பாக்கெட்டுகளை மக்களுக்கு அளித்தனர். சில இடங்களில் நிவாரண பொருட்கள் அடித்துப் பிடுங்கப்படுவதாக தகவல் வரவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

அதிமுகவினர் அடாவடி
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு, தனியார் வழங்கிய நிவாரண உதவிகளை ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் பொறுப்போடு விநியோகித்துக் கொண்டிருந்தனர் அரசு அதிகாரிகள். கடந்த 7ம் தேதியன்று அங்கு சென்ற அ.தி.மு.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட பால் டேங்கர்கள் மூன்றையும் கடத்திக்கொண்டு சென்று விட்டனராம்.

பணம் பார்த்த அதிமுகவினர்
அந்த மூன்று டேங்கர் பாலையும் வெளி மார்க்கெட்டில் விற்று பணம் பார்த்து விட்டார்களாம். இது ஒரு புறம் இருக்க,
நிவாரண உதவிகள் தர வருவோரை வருவாய்தத்துறையினரே ஆங்காங்கே தடுத்து அதிமுகவினருக்கு தகவல் தருவதும் நடைபெற்றுள்ளதாம். இதனையடுத்து அங்கு வரும் அதிமுகவினர் அதை வாங்கிச் சென்றுள்ளனர்

ஆள் பார்த்து நிவாரணம்
சொந்த காசை போட்டு நிவாரண உதவி செய்யாமல், தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் கொண்டு வரும் நிவாரண பொருட்களை பிடுங்கி கொண்டு போவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றனர் பொதுமக்கள். அதேபோல
தாங்கள் சொல்பவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் அடாவடியில் இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம்பரத்தில் தன்னார்வலர்கள்
தாம்பரம், மாடம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த மக்களுக்கு சாப்பாடு, பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரில் இருந்து வந்த தன்னார்வலர் குழுவினர், மாடம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வினியோகம் செய்ய துவங்கினர்.

தன்னார்வலர்களிடம் தகராறு
அப்போது அங்கு வந்த அப்பகுதி அதிமுகவினர், நீங்கள் இங்கு நிவாரணப் பொருட்களை வழங்கக்கூடாது. நாங்கள் குறிப்பிடும் நபர்களுக்கு மட்டும்தான் நீங்கள் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்று தகராறு செய்தனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தன்னார்வலர்களுக்கு மிரட்டல்
இங்கு நிவாரணப் பொருட்களை வழங்கினால், நாங்கள் வன்முறையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அதிமுகவினர் அச்சுறுத்தவே, அதிர்ச்சி அடைந்த தஞ்சை தன்னார்வலர் குழுக்கள் தங்கள் வாகனங்களை அங்கிருந்து எடுத்து சென்று அகரம்தென், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி சென்றனர்.

தேர்தல் வரட்டும்
இதைப் பார்த்த மாடம்பாக்கம் பகுதி மக்கள் ஓட்டு போட மட்டும் நாங்கள் வேண்டும். உணவுப் பொருட்கள் மட்டும் நீங்கள் குறிப்பிடும் ஆட்களுக்கு எடுத்து செல்வீர்களா? தேர்தல் வரட்டும் அப்ப இருக்கு உங்களுக்கு என்று கூறி என்று அதிமுகவினரை ஆவேசமாக திட்டி தீர்த்தனராம்.

கணக்கு காட்டணுமே
கட்சி தலைமையிடம் யார் யார் எந்தனை லட்சம் செலவழித்து நிவாரணம் அளித்துள்ளனர் என்பதற்காகவும் போட்டோ பிடித்து புகைப்படத்தை கட்சி நாளிதழில் பிரசுரம் செய்யவுமே அதிமுகவினர் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டி குட்டு வாங்கியவர்கள் மீண்டும் நிவாரண பொருட்களில் கை வைப்பதால் பொதுமக்கள் பலரும் அதிமுகவினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications