துணை முதல்வர் பதவிதான் வேணும்... அடம்பிடிக்கும் அதிமுகவின் ஐந்தாவது கோஷ்டி!
அதிமுகவில் புதியதாக உருவாகி உள்ள ஐந்தாவது கோஷ்டி தங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகிறதாம்.
சென்னை: அதிமுக அணிகள் இணையும் நிலையில் தங்களுக்கு துணை முதல்வர் பதவியைத் தர வேண்டும் என்று அக்கட்சியில் புதியதாக உருவாகியுள்ள ஐந்தாவது கோஷ்டி அடம்பிடித்து வருகிறதாம்.
அதிமுகவானது ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன், திவாகரன் கோஷ்டிகள் என பிளவுபட்டு நிற்கிறது. தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டிகள் இணைய திட்டமிட்டுள்ளன.
புதிய கோஷ்டி
இந்த நிலையில் 28 எம்.எல்.ஏக்கள் இணைந்து தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கடந்த சில நாட்களாக அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
துணை முதல்வர் பதவி
28 எம்.எல்.ஏக்களும் சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியிருந்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிமுக அணிகள் இணையும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களது கோஷ்டிக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
கொந்தளிப்பில் கொங்கு கோஷ்டி
இது எடப்பாடியின் கொங்கு மண்டல கோஷ்டியை கொந்தளிக்க வைத்துள்ளதாம். ஆனால் கவுண்டர் சமூகத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது போல எங்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக துணை முதல்வர் பதவியை தந்தே ஆக வேண்டும் என கறாராக இருக்கிறதாம் ஐந்தாவது கோஷ்டி.
அரசு நீடிக்காது
அப்படி எங்களுக்கு எதுவும் செய்யாமல் போனால் அதிமுக அரசு நீடிக்காமல்தான் போகும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது இந்த ஐந்தாவது கோஷ்டி. இதனால் ஐந்தாவது கோஷ்டியின் நடவடிக்கைகளை உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.