நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. சசிகலா அதிமுக அவசர அழைப்பு!
அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னைக்கு வர வேண்டும் அதிமுகவின் சசிகலா அணி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அனைத்து மாவட்ட செயலாளர்கள் நாளைக்கு சென்னைக்கு வர வேண்டும் என அதிமுகவின் சசிகலா அணி அவசர அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட செயலளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சி தனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சசிகலா தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார்.
அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இதுவரை சசிகலா குடும்பத்துடன் ஒட்டிஉறவாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அதிமுக தற்போது டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னை வர சசிகலா தரப்பு அவசர அழைப்பு விடுத்துள்ளது. நாளை தலைமைக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
துணைப்பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் தலைமையில் முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.