23 கேள்விக்குப் பதில் சொல்லனும்.. கட்டணம் கண்டிப்பாக வாபஸ் கிடையாது.. இது அதிமுக விருப்ப மனு!
சென்னை: அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு வழங்கப்படும் மனுவில் 23 கேள்விகள் கேட்கப்பட்டு அதை நிரப்பக் கூறுகிறார்களாம். அதேபோல இந்த மனுவுடன் அளிக்கப்படும் கட்டணப் பணம் திரும்பத் தரப்படாதாம். அதைக் கட்சிக் கணக்கில் சேர்த்து விடுவார்களாம்.
சட்டசபைத் தேர்தலுக்கு ஆளுக்கு முந்தியாக அதிமுக தயாராகி வருகிறது. முதல் ஆளாக விருப்ப மனுக்களை அதிமுக வாங்க ஆரம்பித்து விட்டது. இதையடுத்து பாமக, திமுகவும் வி்ருப்ப மனுக்களை வழங்கலாம் என்று கூறியுள்ளன.
இந்த நிலையில் அதிமுக விருப்ப மனு குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
மொத்தம் 23 கேள்வி
இந்த விருப்ப மனுவில் 23 வகையான கேள்விகளைக் கேட்டுள்ளனராம். அந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி மனுவை அளிக்க வேண்டுமாம்.
கட்டணம் ஸ்வாஹா
விருப்ப மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. வேட்பாளரானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி கட்டணப் பணத்தைத் திரும்பக் கேட்கக் கூடாதாம்.
என்னென்ன விவரம்?
வேட்பாளராக ஆக வி்ரும்புவோரின் பெயர், பிறந்த தேதி, வயது, தந்தை, தாய், கணவர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் பெயர்; கல்வித் தகுதி; எந்த ஜாதியைச் சேர்ந்தவர், உட்பிரிவு இருந்தால், அந்த விவரம், கட்சியில் எந்த ஆண்டில் இருந்து உறுப்பினர், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி பதவி, அரசு பதவி, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி வகித்தால் அதை குறிப்பிட வேண்டும்.
தொகுதி குறித்த அறிவு இருக்கா
மேலும், போட்டியிட விரும்பும் தொகுதியில் உள்ள, மொத்த வாக்காளர் எண்ணிக்கை; ஒவ்வொரு சமூகத்தினரின் சுமாரான வாக்காளர் எண்ணிக்கை விவரம்; அந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதற்கான முக்கியக் காரணங்கள்; விண்ணப்பதாரருக்கு உள்ள வெற்றி வாய்ப்பு குறித்த விவரம், ஏற்கனவே கட்சியில் வகித்த பொறுப்புகள் மற்றும் அரசு பதவிகள் விவரம் தெரிவிக்க வேண்டும்.
பொய் சொல்லப்படாது
இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டுமாம். இப்படிக் கூறும் தகவல்களுக்கு முழுப் பொறுப்பையும், நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் உறுதிமொழி அளிக்க வேண்டுமாம்.