தினகரனுக்கு எதிராக தீபக் கருத்தால் வியப்பு: வைகைச் செல்வன்
டிடிவி தினகரனுக்கு எதிரான தீபக்கின் போர்க் கொடி வியப்பைத் தருவதாக அதிமுகவின் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பை தருகிறது என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சசிகலா முகாமில் இருந்தவர் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக். ஆனால் தீபக் இன்று திடீரென சசிகலாவின் அக்காள் மகனும் அதிமுக துணை பொதுச் செயலருமான டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவும் வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளதாவது:
அதிமுக தலைமைக்கு எதிராக தீபக் திடீரென கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது. தீபக்குக்குப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்து கொள்ளலாம். ஜெயலலிதாவுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை தரவும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் அதிமுகவினருக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு வைகைச் செல்வன் கூறினார்.