சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு.. அதிமுக ஆதரவாளர்கள் காங்கிரசில் ஐக்கியம்
சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆதரவாளர்கள் காங்கிரசில் கட்சியில் இணைந்தனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் சுமதி நாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சசிகலா பொதுச்செயலராவதற்கே அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இருப்பினும் அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றி பதவியை அடைய சசிகலா தரப்பு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதன்படி சில மாவட்டச் செயலாளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இத்தீர்மானங்களுடன் சென்னைக்கும் படையெடுத்து சசிகலாவிடம் நேரில் கொடுத்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் சுமதி நாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் மணிரத்தினம் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.
இவரது கணவர் நாகராஜன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காத செய்தி கேட்டு இறந்து போனவர் என்பது குறிப்பிடதக்கது.