அள்ளிக் கொடுக்காத காவிரி டெல்டா மாவட்டங்கள்... அதிமுக நம்பிக்கை தகர்ப்பு
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடப்பட்டதை தம்முடைய சாதனையாக பிரசாரம் செய்ததால் டெல்டா மாவட்டங்களில் அத்தனை தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என்ற அதிமுகவின் நம்பிக்கை சட்டசபை தேர்தலில் ஈடேறவில்லை.
டெல்டா மாவட்ட பிரசாரங்களில் காவிரி நதிநீர் பிரச்சனையைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் பேசின. மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்தும் அரசியல் கட்சிகள் பேசின. ஜெயலலிதாவின் பிரசாரத்தில் காவிரி விவகாரம், மீத்தேன் எரிவாயு திட்ட விவகாரத்தில் திமுக துரோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணியும் இதேபல்லவியைப் பாடியது.
இதற்கு திமுகவால் விளக்கம் மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால் அரசியல் கட்சிகளின் இந்த பிரசாரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்மாவட்டங்களில் மொத்தம் உள்ள 39-ல் அதிமுகவுக்கு 23; திமுகவுக்கு 16 தொகுதிகளை வழங்கியுள்ளனர் வாக்காளப் பெருங்குடிமக்கள்.

அரியலூர், பெரம்பலூரில் அள்ளியது
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் அதிமுக- 5; திமுக- 4 தொகுதிகளில் வென்றுள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 4 தொகுதிகளையும் அள்ளிக் கொண்டுவிட்டது அதிமுக.

கடலூர், தஞ்சை
கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளில் அதிமுக -5; திமுக -4ல் வென்றுள்ளன. தஞ்சாவூரில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சாவூர் தவிர தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் திமுக-4; அதிமுக-3 தொகுதிகளில் வென்றுள்ளன.

நாகை- அதிமுக; திருவாரூர்- திமுக
நாகப்பட்டினத்தின் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக 5-ஐ அள்ளியது. திமுகவுக்கு 1 தான் கிடைத்தது. ஆனால் திருவாரின் 4 தொகுதிகளில் திமுக 3 இடங்களை அள்ள அதிமுகவுக்கு 1தான் கிடைத்துள்ளது. மொத்தமாக அள்ளிவிடுவோம் என்ற அதிமுகவின் எதிர்பார்ப்பை டெல்டா மாவட்டங்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.

மாயமான் வித்தை
இத்தனைக்கும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகியவை இடதுசாரிகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகளாக கருதப்பட்டவை. ஆனால் திமுக, அதிமுக கட்சிகளின் தோளில் சவாரி செய்த இடதுசாரிகள் தங்களுக்கு அப்படியான ஒரு செல்வாக்கு இருக்கிறது என மாயமான் விளையாட்டைத்தான் நடத்தினர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications