தேர்தல் அதிகாரிகளை மிரட்டும் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்
சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை திமுக தலைவர் கருணாநிதி மிரட்டுவதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. மீண்டும் புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களை தலைமை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்தது. அதில் நேர்மையாக பணியாற்றிய அதிகாரிகளின் இடமாற்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எம்.தம்பிதுரை, பி.வேணுகோபால், ஏ.நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னார்ட், டி.ஜி.வெங்கடேசன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், தேர்தல் தொடர்புடைய மற்றும் வேறு அதிகாரிகளை அதிக அளவில் மாற்றும் நடவடிக்கை குறித்து 2-ந் தேதி கொடுத்துள்ள புகாரின் தொடர்ச்சி இதுவாகும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் உள்நோக்கத்துடனான புகார்களின் அடிப்படையில், அதிக அளவில் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபித்து இருந்தோம்.
இந்த சூழ்நிலையில், உள்நோக்கத்தோடு கொடுக்கப்படும் புகார்கள், தி.மு.க.வுக்கு அரசியல் லாபமாக மாற்றப்படுகின்றன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம். அதிகாரிகளின் இடம் மாற்றம் குறித்து கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையில், கருத்து வெளியிட்டுள்ளார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், தற்போது இந்த இடம் மாற்றத்தின் மூலம் அரசியல் லாபங்களை பெற முயற்சிக்கின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இடம் மாற்றத்தை ஒரு பிரச்சினையாக்கி அதை அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக அரசியல் பரப்புரையாக கருணாநிதி பேசி வருகிறார். இந்த இடம் மாற்றம் மூலம் இழிவான ஆதாயத்தை தி.மு.க.வினர் பெற முயற்சிக்கின்றனர். கருணாநிதியின் அறிக்கை ஒரு மறைமுகமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளை மிரட்டும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். எனவே, அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப்பெறப்பட வேண்டும். அதோடு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியலாக்கிய நடவடிக்கைக்காகவும், அதிகாரிகளை மிரட்டியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காகவும், கருணாநிதி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதிமுக எம்பிக்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.