அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை : காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து இருக்கிறார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். தற்போது இந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பழரசம் அருந்தி ஓபிஎஸ், ஈபிஎஸ் உண்ணாவிரதத்தை முடித்தனர். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட துணை முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும். காவிரி வாரியம் பற்றி பேச திமுக, காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை. திமுக அரசியல் லாபத்திற்காக மக்களிடம் தவறான கருத்துகளை திணிக்கப் பார்க்கிறது.'' என்றார்.
மேலும் ''காவிரிக்காக ஜெயலலிதா செய்த பணிகளை மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.காவிரி விவகாரத்தில் பெரிய துரோகம் செய்த கட்சியே திமுகதான்.'' என்றும் குறிப்பிட்டார்.