சசிகலாவுக்கு எதிராக 'ஜாதிகள்' ரீதியாக அணி திரளும் அதிமுக அதிருப்தியாளர்கள்!
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதிருப்தியாளர்களை சசிகலா புஷ்பா ஒருங்கிணைத்து வருகிறார்.
சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்படும் நாளில் போட்டி அதிமுகவை உருவாக்க இந்த அதிருப்தி அணி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலராகிவிடுவதில் சசிகலா மும்முரமாக இருக்கிறார். ஆனால் சசிகலாவை ஏற்க அதிமுக தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை.
எந்தெந்த ஜாதிக்கு முக்கியத்துவம்?
அதிமுக ஆட்சியில் தேவர் சமூகத்தினர் 20 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இவர்களில் 9 பேர் அமைச்சர்கள். வன்னியர் சமூகத்தை சேர்ந்த 19 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள். ஆனால் 28 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்தில் 5 பேர்தான் அமைச்சர்கள்; 31 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தலித் சமூகத்தில் வெறும் 3 பேர்தான் அமைச்சர்கள்.
சசிகலா புஷ்பாவுடன்...
தற்போது முதல்வர் பன்னீர்செல்வம், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுச்செயலராக இருக்கும் சசிகலாவும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்படி ஆட்சியிலும் கட்சியிலும் தேவர் சமூகத்தின் ஆதிக்கம்தான் என்பதை எப்படி ஏற்க முடியும்? என்ற கேள்வியுடன் நாடார், கவுண்டர், தலித் சமூக அதிமுக நிர்வாகிகள் அணி திரள்கின்றனர். இந்த அதிருப்தியாளர்கள் சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
பொதுச்செயலரானால்..
ஏற்கனவே சசிகலாவால் ஓரம்கட்டப்பட்ட பிஹெச் பாண்டியன், ராஜகண்ணப்பன், கேபி முனுசாமி உள்ளிட்ட பலரும் சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டும் பேசி வருகின்றனர். சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படும் நாளில் இவர்கள் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் பல மூத்த நிர்வாகிகளும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்த "போட்டி அதிமுக".
சு.சுவாமி
இதனால்தான் சுப்பிரமணியன் சுவாமி, இந்து ராம் உள்ளிட்டோர் சசிகலா பொதுச்செயலரானால் அதிமுக உடைவது உறுதி என தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.