ஓபிஎஸ் ஒரு ஜீரோ.. பச்சை பொய்யர்.. திமுக நூலில் ஆடும் போலி புனிதர்… டிடிவி தினகரன் பொழிந்த வசை மழை
அதிமுக தலைமை அலுவலகம் வந்த டிடிவி தினகரன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை வசைமாரி பொழிந்தார். மேலும் தங்களுக்கு ஒரே எதிரி திமுகதான் என்றும் அவர் கூறினார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பர அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்த நேரம் பார்த்து ஜெயலலிதா மறைந்ததால் ஏற்பட்ட காலி இடத்திற்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் குறித்து, ஓபிஎஸ் குறித்தும், அதிமுக தலைமை அலுவலகம் வந்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள்:

ஆர்.கே. நகரில் வெற்றி உறுதி
ஆர்.கே. நகரில் தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும் என்று கட்சி தீர்மானிக்கின்றதோ அவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். நங்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றிவோம். ஆர்.கே. நகர் தொகுதியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

ஒரே எதிரி திமுகதான்
ஓபிஎஸ் அணி என்ற ஒரு அணி இல்லை. பத்திரிகையாளர்கள் அவர்களை பெரிய அணியாக முன் நிறுத்துகிறார்கள். எங்களுக்கு தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் எதிரி. அவர்களை நாங்கள் இடைத்தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்போம்.

பொய் பிரச்சாரம்
ஜெயலலிதா மரணம் குறித்து பேசுவதெல்லாம் பொய் பிரச்சாரங்கள். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அதிமுக, தமிழக மக்களுக்காக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் மறைந்த பின்னர் ஜெயலலிதாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. தற்போது இன்னும் சிறப்பாக அதிமுக செயல்படும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

ஜீரோ பன்னீர்
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "அவரைப் பற்றி கேள்வி கேட்டு ஜீரோவாக இருக்கின்ற ஓ. பன்னீர்செல்வத்தை ஹீரோவாக்க முயற்சி மேற்கொள்கின்றீர்கள். எங்களைப் பொருத்தவரை அவர் ஒரு ஜீரோ பன்னீர்செல்வம் அவ்வளவுதான்" என்று தினகரன் கூறினார்.

போலி புனிதர்
மேலும், ஓ. பன்னீர்செல்வம் ஒரு பச்சை பொய்யர் என்றும் அவர் திமுகவின் நூலில் ஆடும் போலி புனிதர் என்றும் கடுமையாக ஓபிஎஸ்ஸை விமர்சனம் செய்தார் டிடிவி தினகரன். ஓபிஎஸ் அணி என்ன பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் அதிமுக வெல்லும் என்று தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications