ஊட்டி கண்டோன்மென்ட் தேர்தல்.. அத்தனை வார்டுகளையும் அள்ளியது அதிமுக.. பாஜக, தேமுதிக காலி!
சென்னை: ஊட்டி கண்டோன்மென்ட் வாரியத்திற்கு நடந்த தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள 7 வார்டுகளிலும் அது வெற்றி பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் செல்வாக்குடன் உள்ளதாக கூறப்படும் பாஜக அங்கு டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது. தேமுதிகவும் தேய்ந்து போய் விட்டது.
சென்னை, பல்லாவரம்- பரங்கிமலை கண்டோன்மென்ட் வாரியத்திற்கு நடந்த தேர்தலில் 7 வார்டுகளில் 4 வார்டுகளில் அது வெற்றி பெற்றது.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டின் 7 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதற்காக வெலிங்டன், ஜெயந்தி நகர், அன்னை இந்திரா நகர், பாபு கிராமம், எம்.ஆர்.சி. அரங்கம், சின்ன வண்டி சோலை, வெலிங்டன் பஜார் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏராளமான பொது மக்களும், ராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளை செலுத்தினர்.
ஆண்களை விட பெண்களே வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினார்கள். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் காலை முதல் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர்.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஏழு வார்டுகளிலும் அதிமுக அபார வெற்றி பெற்றது.
1வது வார்டில் துரைராஜ் 666 வாக்குகளும், 2 வது வார்டில் சிவக்குமார் 862 வாக்குகள், 3 வது வார்டு ஜெபஸ்டியன் 685 வாக்குகள், 4 வது வார்டு எம்.பாரதியார் 359 வாக்குகள், 5 வது வார்டு சீனிவாசன் 666 வாக்குகள், 6 வது வார்டு மேரிஷீபா 326 வாக்குகள், 7 வது வார்டு லதா 494 வாக்குகள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அனைத்து வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியதால் அக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேமுதிக மகா கேவலம்
இதில் தேமுதிக அனைத்து வார்டுகளிலும் டெபாசிட்டைப் பறி கொடுத்ததது. திமுக 5 வார்டுகளிலும் டெபாசிட்டை இழந்தது. பாஜக, காங்கிரஸுக்கும் எந்த வார்டிலும் டெபாசிட் கிடைக்கவில்லை.
பாஜக ரொம்பக் கேவலம்
அதேபோல பாஜகவுக்கும் இது கேவலம்தான். காரணம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளதாக கருதப்படுவது பாஜக. ஆனால் ஒரு வார்டில் கூட டெபாடிட்டைப் பெற முடியாத அளவுக்கு அது அடித்து வீழ்த்தப்பட்டுள்ளது சோகம்தான்.
பல்லாவரம் - 4 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி
பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் தேர்தல் நேற்று நடைபெற்றது. 7 வார்டுகளில் 94 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டது. அ.தி.மு.க.-தி.மு.க. தொண்டர்களிடையே நடந்த மோதலில் தி.மு.க. வேட்பாளர் கோபிநாத் மண்டை உடைக்கப்பட்டது.
பரங்கிமலை-பல்லாவரம் மேற்கு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 317. இதில் 24 ஆயிரத்து 933 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இது 70.69 சதவீதமாகும்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கண்டோன் மெண்ட் போர்டு அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அருளானந்தம் தலைமையில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டு வாரியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் 1வது வார்டில், அதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயந்திமாலா 516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2 வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்ராஜா 1806 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3 வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 8 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4 வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் லாவண்யா 1737 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.