சசிகலா பேனரை அகற்ற கோரி அதிமுக மகளிர் அணியினர் சாலை மறியல்
சசிகலா பேனரை அகற்றக் கோரிஅதிமுக மகளிர் அணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனரை அகற்றக் கோரி அதிமுக மகளிர் அணியினர் திருவொற்றியூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் கட்சியில் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவி இன்னும் நிரப்பப்பட வில்லை.
அந்தப் பதவியை கைப்பற்ற சசிகலா தரப்பு காய் நகர்த்தி வருகிறது. கட்சியிலும் தங்களுக்கு ஆதரவான சூழ்நிலையையும் உருவாக்கி அதன் மூலம் விரைவில் பொதுச் செயலாளர் பதவியில் அமர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடைய கட்சியின் மூத்த தலைவர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் திருவொற்றியூர் தாங்கல் தியாகராயபுரத்தில், சசிகலா வழி நடப்போம் என்று கூறி சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. மகளிர் அணியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பேனரை உடனடியாக அகற்றக்கோரி 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பேனரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பேனர் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, மாநகராட்சி உதவியுடன் அகற்றினர்.