ஜெயலலிதா 6வது முறையாக முதல்வரானார்... திருவிழா போல கொண்டாடும் அதிமுகவினர்
சென்னை: தமிழக முதல்வராக 6வதுமுறையாக ஜெயலலிதா பதவியேற்றதை காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மெரீனா கடற்கரைச்சாலையில் குவிந்தனர். செண்டை மேளம் இசைத்தும், உற்சாக நடனமாடியும் தொண்டர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் ஆட்சியை பிடித்து பெரும்பான்மை பெற்றது. அதனையடுத்து, அக்கட்சியின் சட்டசபைத் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவுடன் இணைந்து, அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் சென்னையில் குவிந்த காரணத்தால் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
போயஸ்கார்டன் தொடங்கி ராதாகிருஷ்ணன் சாலை முழுவதிலும், காந்தி சிலையில் இருந்து சென்னை நூற்றாண்டு பல்கலைக்கழக வளாகம் வரையிலும் ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்புப் பதாகைகளும், அதிமுக கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவை, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் நவீன மின்னணு திரைவாகனம் (எல்.இ.டி. வீடியோ வேன்) மூலமாக, (தஞ்சை, கரூர் நீங்கலாக)தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில், முதல்முறையாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பட்டது. அவர் வெளிநாடு சென்றிருப்பதால் மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் விழாவில் கலந்து கொண்டனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை ஏற்றுகொண்டு இன்றே பணிகளைத் தொடங்கினர்.
தாலிக்கு 8 கிராம் தங்கம், விவசாய கடன் ரத்து, 100 யூனிட் இலவச மின்சாரம், காலையில் இலவச சிற்றுண்டி, டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு, 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட பல முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்து போட்டு தேர்தல் அறிக்கையில் கூறியதை முதல்நாளே நிறைவேற்றினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து, ஐந்தாவது முறையாக கடந்த ஆண்டு ஜெயலலிதா இதேநாளில்தான் பதவியேற்றார். இப்போது சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து 6வது முறையாக இன்று பதவியேற்றார்.
ஜெயலலிதாவிற்கு நாடுமுழுவதிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மதுவிலக்கு நேரம் குறைப்பு, விவசாய கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்களுக்கு முதல் கையெழுத்து போட்ட ஜெயலலிதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications