ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த 3வது நாளாக குவியும் மக்கள் - அதிமுகவினர் அன்னதானம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 3வது நாளாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரிசையில் நிற்பவர்களுக்கு அதிமுகவினர் அன்னதானம் செய்து வருகின்றனர்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கட்கிழமை மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை 4.30 மணி அளவில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பலரால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.

பொதுமக்கள் அஞ்சலி
இதனை தொடர்ந்து தங்கள் தலைவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினசரியும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கண்ணீர் கடலில் தொண்டர்கள்
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஏராளமான பொதுமக்கள் மூன்றாவது நாளாக இன்றும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா மறைந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகுந்த சோகத்தில் காணப்படுகின்றனர்.

அன்னதானம்
ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு, தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு, காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

களையிழந்த போயஸ்கார்டன்
மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தையும், போயஸ் கார்டன் வீட்டையும் மக்கள் கண்ணீர் மல்க பார்த்துவிட்டு செல்கின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை நிலையமும் களையிழந்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications