அக்.3 இல் எச் ராஜா ஆஜராக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!
சென்னை: அக்டோபர் 3-ஆம் தேதி எச் ராஜா அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்பு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க போலீஸார் அனுமதி வழங்காததால் அவர்களுடன் எச் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீஸாரை லஞ்சம் வாங்குபவர்கள், வெட்கம் இல்லாதவர்கள் என அவதூறாக பேசினார். இதையடுத்து ஹைகோர்ட்டையும் கெட்ட வார்த்தையால் திட்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு எதிரான தவறான கருத்துகளை தெரிவித்த எச் ராஜா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர பரிந்துரை செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்துள்ளார்.
அதனை விசாரித்த தலைமை வழக்கறிஞர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர ஏன் அனுமதி அளிக்க கூடாது என்று கேட்டு எச் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அக்டேபார் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எச் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.