ஒரே நேரத்தில் தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள் திடீர் சுகவீனம்!
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் திடீர் சுகவீனம் அடைந்திருப்பது அதிமுக, திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் அவருக்க் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நுரையீரலில் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருகிறார். சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அவர்வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் 2 முறை அமைச்சரவை கூட்டங்களை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தின் மற்றொரு மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியும் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. கருணாநிதி வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகள் சில சேராததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக திமுக அறிக்கை கூறுகிறது.
கருணாநிதியை நேரில் பார்க்க வந்து யாரும் தொந்தரவு தரவேண்டாம்; அவருக்கு முழுமையான ஓய்வு தேவை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதி முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழகத்தின் அதிமுக, திமுக கட்சிகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் திடீரென சுகவீனமடைந்துள்ளது இரு கட்சித் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications