வேர்பிடித்த மா.செ.க்"களை" வெட்டி எறியும் திமுக!! கிலியில் 'குறுநில மன்னர்கள்"!!
சென்னை: திமுக அமைப்பில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதால் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாவட்டங்களில் குறுநில மன்னர்களாக கோலோச்சுகிற மாவட்ட செயலர்கள் கதிகலங்கிப் போய்கிடக்கின்றனர். ஆனால் திமுகவில் வேர்பிடித்துப் போய்விட்ட மா.செக்"களை" வேரோடு வீழ்த்தும் தருணம் வந்துவிட்டதாக அடிமட்டத் தொண்டர்கள் புளகாங்கிதம் அடைந்து போயுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. கடந்த காலங்களிலும் திமுக தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறது. ஆனால் 3வது இடம், 4வது இடம் என கேவலங்கெட்டு தோற்றது இப்போது மட்டுமே.
அத்துடன் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5 முதல் 10%தான் இருக்கும். இப்போது நிலைமை தலைகீழாய் போய் திமுக தொண்டர்களை தலைகுனிய வைத்திருக்கிறது.
அசைக்க முடியாத நந்தி குறுநில மன்னர்கள்
இந்த படுதோல்விக்கு விழுப்புரம் பொன்முடி, திருச்சி கே.என். நேரு, திருவண்ணாமலை எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, சுப.தங்கவேலன், தூத்துக்குடி பெரியசாமி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கோவை பொங்கலூர் பழனிச்சாமி, கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என மாவட்டங்களில் கட்சிக்குள் 'குறுநில மன்னர்களாக கோலோச்சும்' மாவட்டச் செயலாளர்களும், அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து பரம்பரை திமுகக்காரனை மனம் புழுங்க வைத்துக் கொண்டிருக்கிற விருதுநகர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், நெல்லை கருப்பசாமிப் பாண்டியன் போன்றவர்களுமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அடுக்கடுக்கான புகார்கள்
இவர்கள் அத்தனை பேரும் மீதும் அடுக்கடுக்கடுக்காக அண்ணா அறிவாலயத்தில் புகார் கடிதங்கள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன..இது தொடர்கதையாகிக் கொண்டே போகிறதே என்ற குமுறல் ஒவ்வொரு திமுக தொண்டருக்கும் இருந்து வந்தது.
மா.செக்களை மாற்றியே ஆக வேண்டும்- ஸ்டாலின் எதிர்ப்பு
இப்படி மாவட்ட செயலர்களை ஒட்டுமொத்தமாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கலகக் குரல் திமுக தொண்டர்களிடையே ஓங்கி ஒலித்தாலும் "தளபதி" ஸ்டாலினோ எங்கே தனக்கான ஆதரவு வட்டம் காணாமல் போய் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் மாவட்ட செயலர்களை நீக்க முட்டுக்கட்டை போட்டு வந்தார்.
திமுக உயர்நிலைக் குழு கூட்டம்
இந்த களேபர களநிலவரத்துக்கு இடையே நேற்று நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் கட்சி அமைப்பில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஒருவழியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
தீர்மானம் என்ன?
"கழகத்தின் ஆக்கப் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் ஆற்றுவதற்கும், தொடர்ச்சியான பணிகளுக்கு அனைத்துப் பகுதிகளையும் நேரடியான சிறப்புக் கவனத்தில்கொள்வதற்கும் ஏற்றவாறு, தற்போதுள்ள மாவட்டக் கழக எல்லைகளை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தக் கருத்துக்குச் செயல் வடிவம் கொடுத்திடும் வகையில், மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், கழகத் தலைமைக்குப் பரிந்துரை செய்யவும், குழு ஒன்றினை அமைப்பது என்றும், அந்தக் குழுவின் பரிந்துரைகள் மீது முடிவெடுத்து அதனையொட்டி முறைப்படி கழகத்தின் அமைப்பு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது" என்கிறது அத்தீர்மானம்
எதிர்த்தாலும் மறுமலர்ச்சி வருதே..
இப்படி மாவட்டச் செயலாளர்களுக்கு வேட்டு வைக்கும் போது மிகக் கடுமையாக எதிர்ப்புகளை அவர்கள் காட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதனை நிச்சயம் கருணாநிதி எதிர்கொள்வார்.. அவர் பார்க்காத மாவட்ட செயலாளர்களா? அவர் பார்க்காத திமுக பெரும் புள்ளிகளா? என்ற பெரும் ஏக்கத்துடனும் திமுகவின் மறுசீரமைப்பில் புதிய மறுமலர்ச்சி காணப்போகிறோம் என்ற மட்டில்லா மகிழ்ச்சியுடன் காத்துக் கிடக்கின்றனர் திமுகவின் "உடன்பிறப்புகள்".