சீரழிந்து செயலிழந்து போன தமிழக அரசு நிர்வாகம்.. இனியாவது சுறுசுறுப்பாக செயல்படுமா?
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து போனது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மட்டுமல்ல, மக்களின் ஏகோபித்த எரிச்சலும் கூட. ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல், செயல்படுத்தாமல், தொடங்கி வைக்காமல் உப்புக்குச் சப்பாணி அரசு போல நடந்து வந்தது இந்த அரசு. தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவுள்ளதால், பல்வேறு திட்டங்களை அறிவிக்கவும், திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
இந்தியாவின் மிகவும் வளர்ச்சி அடைந்த தொழில்மயமான மாநிலங்களில் முக்கியமானது தமிழகம். தேசிய அளவில் தமிழகத்தின் தொழிற் பங்கு 8 சதவீதமாகும்.

ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இங்குள்ளன. ஜவுளித்துறையில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் ஜெயலலிதா சிறைக்குப் போனது முதலே எழவு வி்ழுந்த வீடு போல ஆகி விட்டது தமிழகம். எங்கு பார்த்தாலும் அமைச்சர்களின் அழுகை, பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஸ்தம்பித்துப் போய்க் கிடந்தன.
எந்தத் திட்டமும் தொடங்கி வைக்கப்படவில்லை. எந்தத் திட்டப் பணியும் நடந்ததாக தெரியவில்லை. அமைச்சர்களுக்கு கோவில்களுக்குப் போகவே நேரம் சரியாக இருந்தது. அலுவலங்களுக்கு வருவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
தமிழக அரசின் செயல் திறமையின்மை காரணமாக பல பிரச்சினைகளை தமிழக தொழில்துறையும், தொழிலாளர்களும் சந்திக்க நேரிட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டது. பாக்ஸ்கான் நிறுவனம் மூடப்பட்டது.
பல முக்கியத் திட்டங்களை தொடங்காமல் நிறுத்தி வைத்து மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் ஓ.பன்னீர் செல்வம் அரசு சந்தித்தது, சம்பாதித்தது.
அதில் உச்சமாக, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாக அறிவித்து பல கோடியை செலவிட்ட பின்னர் கடைசி நேரத்தில் அதைத் தள்ளி வைத்தனர். ஜெயலலிதா வந்து அவர் தலைமையில் நடைபெற வேண்டும் என்பதற்காக இதைத் தள்ளி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால் அதிகாரிகள் தரப்பில் சற்று நிம்மதி பிறந்துள்ளதாம்.
கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள வீடியோ கான்பரன்ஸ் அறை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். தினசரி ஒரு திட்டத்தை தொடங்க வைத்து வந்தார் ஜெயலலிதா. ஆனால் அவர் சிறைக்குப் போனது முதலே அந்த அறை வெறிச்சோடிப் போய் விட்டது. பூட்டியே கிடந்தது. யாரும் அந்தப் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
தற்போது அந்த அறையை படு வேகமாக சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால் அறையை சுத்தப்படுத்தி புதுப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போது ஜெயலலிதாவின் வருகைக்காக காத்துக் கிடக்கும் திட்டங்களில் சில...
தமிழகம் முழுவதும் 100 அரசுக் கட்டடங்கள் திறப்பு விழாவுக்காக காத்துள்ளன.
400 அரசுப் பேருந்துகள் ஜெயலலிதா வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக டயர் வலிக்க நின்று கொண்டு்ளன.
தமிழகம் முழுவதும் 100 அம்மா உணவகங்கள் திறப்பு விழாவுக்காக காத்துள்ளன.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத் தொடக்க விழாவும் ஜெயலலிதாவுக்காக காத்துக் கிடக்கிறது. அதுவும் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications