சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 4வது தளத்தில் மீண்டும் தீ.. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சிக்கல்!
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 4வது தளத்தில் மீண்டும் தீ எரியத் துவங்கியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கட்டிடத்தை இடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தி நகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். தீயணைப்புப் படையினரின் தீவிர முயற்சியால் 36 மணி நேரத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது.

இதனிடையே இன்று அதிகாலை 3.20 மணி அளவில் கட்டிடத்தின் வலது புறம் 7வது தளத்தில் இருந்து 2 வது தளம் வரை பலத்த சத்த்துடன் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் முகப்பு பகுதியும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது.
இதையடுத்து மீதமுள்ள கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் உள்ளதால் மீதமுள்ள கட்டிடத்தையும் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ராட்சத எந்திரமும் வரவழைக்கப்பட்டது. கட்டிடத்தின் பின்புறம் துழை இடும் பணியும் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த கட்டிடத்தின் 4வது தளத்தில் மீண்டும் தீ எரியத் தொடங்கியுள்ளது. மேலும் 5வது தளத்தில் இருந்தும் அதிகளவு புகை வெளியேறி வருகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடிப்பு பணி தொடங்கிய நிலையில் மீண்டும் தீ பற்றியுள்ளது. இதனால் கட்டிடத்தை இடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடத்தை இடிக்கும் பணி நாளை அதிகாலை தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications