அலங்காநல்லூரில் தடியடிக்குப் பின் மீண்டும் பிரமாண்ட பேரணி- கை கோர்த்த அரசியல் கட்சிகள்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் மீண்டும் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மீண்டும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று காலை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது திடீரென காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
லத்திகள் உடைந்து போகும் அளவுக்கு காவல்துறையினர் நடத்திய தடியடியால் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்தனர். காவல்துறையின் தடியடியால் பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
அவர்கள் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தியும் சட்டையில் கறுப்பு பேட்ச் அணிந்தும் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.