நெருங்கும் கார்த்திகை தீபவிழா - வண்ண விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு
கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் புதிய வடிவிலான கார்த்திகை விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கார்த்திகை மாத பிறப்பு முதல் பெண்கள் தங்கள் இல்லங்களில் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பர். மேலும் தீப திருநாளில் வீடுகள் முழுவதும் விளக்குகளை ஏற்றி வைப்பர். இதையொட்டி கோவில்பட்டி தெற்கு பஜார் பகுதியில் பல்வேறு இடங்களில் கடை மற்றும் பிளாட்பார்மில் கார்த்திகை விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இந்த கடைகளில் மூன்று தட்டு குருவாயில் விளக்கு ரூ.100க்கும், ஐந்து தட்டு பிள்ளwயார் விளக்கு ரூ.120க்கும், அணைய விளக்கு ரூ.50க்கு்ம், சிமினி விளக்கு ரூ.40க்கும், சாம்பிராணி விளக்கு ரூ.40, பாவை விளக்கு ஜோடி ரூ.50, உளளிட்ட பல்வேறு விதமான 100க்கும் மேற்பட்ட விளக்குகள் உள்ளன. இந்தாண்டு புதிய வரவாக பொன் மாட விளக்கு ரூ.400க்கும், டெரகொட்டா ரைட் விளக்கு ரூ.700க்கும், டெரகொட்டை மணி விளக்கு ரூ.500, ரூ.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கார்த்திகை தீப விளக்கை பெரும்பாலும் கொல்கத்தா, மும்பை, புதுச்சேரி, கடலூர், மனாமதுரை, மதுரை, விளச்சேரி போன்ற இடங்களில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த இடங்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் விளக்குகள் விற்பனையில் மாற்றம் இல்லை. பெண்கள் அதிக ஆர்வத்துடன் கார்த்திகை விளக்கை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.