பாஜக-அதிமுக தொண்டர்கள் மோதல்: ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் மீது போலீஸ் வழக்கு!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஸ்ரீரங்கத்தில் முற்றுகையிட்டு இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் மேல வீரேஸ்வரம் பகுதியில் பாஜகவினர் வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக நேற்று தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது அதே வழியில் அ.தி.மு.க. தொண்டர்களும் வேட்பாளர் வளர்மதிக்கு வாக்கு கேட்டு சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் அ.தி.மு.க.வினர் மற்றும் பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் கற்களாலும், கம்புகளாலும் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயராஜன் கார் கண்ணாடியையும் உடைத்தனர். இதை தடுக்காமல் அங்கு நின்ற போலீசார் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், செயலாளர் ராகவன், வேட்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் பார்த்திபன், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் தொண்டர்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரோஜ்குமார் தாகூர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தங்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீதும், தாக்குதலின் போது வேடிக்கை பார்த்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர் அ.தி.மு.க.வினர் தாக்கியதில் பாஜக மாவட்ட தலைவர் பார்த்திபன், துணை தலைவர் கோவிந்தன், ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சர்வேஸ்வரன் ஆகியோர் காயம் அடைந்ததாக ஸ்ரீரங்கம் போலீசில் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி கோவிந்தன் புகார் செய்தார்.
அதே போல பாஜகவினர் தாக்கியதில் சென்னையை சேர்ந்த ஜெகதீசன், கவுதமன் உள்பட 6 பேர் காயம் அடைந்ததாக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீரங்கம் போலீசார், சிவசுப்பிரமணியன் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட நிர்வாகி கோவிந்தன், ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சர்வேஸ்ரவன் உள்பட 9 பேர் மீதும் கும்பலாக வந்து அ.தி.மு.வினரை மிரட்டி தாக்கியதாக வழக்கு பதிவு செய்தார்.
அதே நேரம், பாஜகவினரை தாக்கியவர்கள் அடைாயளம் தெரியாத, அதிமுக கொடி வைத்திருந்தவர்கள் என்று மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே அதிமுகவினர் மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications