இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்றவருக்கு சீட்டா..? ஆவேசத்தில் ஆற்காடு அதிமுகவினர்
சென்னை: வேலூர் மாவட்டம் ஆற்காடு சட்டசபை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமதாஸ் மீது கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், கட்சியின் இரட்டை இலை சின்னத்தையே முடக்க முன்பொரு முறை கையெழுத்திட்டவர் இந்த ராமதாஸ் என்று கொதித்து போய் குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு புகார் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

அந்த புகாரில், எம்.ஜி.ஆர் பெற்றுத்தந்ததும், ஜெயலலிதாவின் வெற்றி சின்னமுமாகிய, இரட்டை இலையை முடக்க 1997ம் ஆண்டு கையெழுத்திட்டவர் ராமதாஸ் என்றும், திருநாவுக்கரசு அணிக்கு சென்றவர்தான் இவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து ஜெயலலிதா, ராமதாசை நீக்கியதாகவும், அதே ஆண்டு, இவர் மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் ஒன்று பதிவு செய்யப்பட்டதாகவும், அதிமுகவினர் புகாரில் கூறியுள்ளனர். 20 வருடங்களாக அதிமுகவின் எந்த ஒரு பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது இல்லை என்றும், இருமுறை போட்டியிட்டு தோற்ற ராசியில்லாதவர் ராமதாஸ் என்றும் புகார் பட்டியலில் பொறுமியுள்ளனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications