திராவிட குடும்பம் நாங்க.. பாஜக கூட்டணியை ஏற்க ஜெயக்குமார் மறுப்பு! இபிஎஸ் பெயர் சொல்லாமல் தவிர்ப்பு!
சென்னை: அண்ணா திமுக- பாஜக கூட்டணி பற்றி எந்த கருத்தும் கூறாமல், மிக நீண்ட விளக்கம் தந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மேலும் தமது குடும்பம், திராவிடர் இயக்க குடும்பம்; தன்மானம் கொண்டது; பதவிக்காக யார் வீட்டு வாசல் கதவையும் தட்டாத குடும்பம் என்று விளக்கம் தந்த ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை மறந்தும் கூட குறிப்பிடாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆண்டாண்டு காலமாக, தொன்றுதொட்டு சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறந்ததை கொண்டாடி வருகிறோம். ஆனால் முந்தைய கருணாநிதி அரசு இதனை மாற்றியது. தமிழ்ப் புத்தாண்டு தை1-ந் தேதி என வரலாற்றில் தமது பெயர் இடம் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே கருணாநிதி மாற்றினார்.

2006-2011-ம் ஆண்டு காலத்தில்தான் தை 1-ந் தேதி, தமிழ்ப் புத்தாண்டு என மாற்றப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. மரபையும் பண்பாட்டையும் திமுக அரசு காற்றில் பறக்கவிட்டது. ஆனால் காலம் காலமாக நாம் பின்பற்றுகிற மரபை, பண்பாட்டை, கலாசாரத்தை மாற்றக் கூடாது என்பதற்காக சித்திரை 1- ந் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு 2011-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசு ஆணை வெளியிட்டார். அப்போது, 2012-ம் ஆண்டு முதல் புத்தாண்டு நிகழ்ச்சி சட்டசபை சபாநாயகராக இருந்த என் தலைமையில் நடைபெற்றது. அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மிகழ்ச்சி.
விசிக தலைவர் திருமாவளவன் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால், அதிமுகவில் இருந்து விலகப் போவதாக சொல்லி இருந்தார் என கூறியிருக்கிறார் திருமாவளவன். நான் அப்படி எந்த நேரத்திலும் சொல்லவில்லை. அப்படி ஒரு திட்டமிட்டு பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. அப்படி நான் சொல்லாத, நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு செய்தியை என்னை வைத்து 4 நாட்களாக டிரெண்டிங்காக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எங்கள் குடும்பம்- திராவிட குடும்பம். 75 ஆண்டுகள் என்னுடைய அப்பாவின் அண்ணன் தேசிங்கு.. அவரை வடசென்னை பெரியார் என்றுதான் அழைப்பார். என்னுடைய அப்பா இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டார். என்னுடைய அப்பாவை பேரறிஞர் அண்ணாதான் அடையாளம் காட்டி, மாநகராட்சி கவுன்சிலராக்கி நிலைக்குழு தலைவராக்கினார். நீண்ட நெடிய ஒரு திராவிட பாரம்பரிய குடும்பம்; தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம்; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்துக்கே இல்லை. ஆகையால் தன்மானத்துடன் இருக்கிறவர்கள் நாங்கள்.
எனக்கு அண்ணா திமுக அடையாளம் காட்டியது; அந்தஸ்தை கொடுத்தது. எனக்கு அடையாளம் தந்தது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான். எனவே வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எங்களுடைய பயணம் தொடரும். எனவே பொய்ச்செய்திகளை பரப்ப வேண்டாம். யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நின்றவன் இந்த ஜெயக்குமார் இல்லை. பதவி என்பது தோளில் போட்டுள்ள துண்டு என்றார் அண்ணா. என்னைப் பொறுத்தவரை ஒரு கர்ச்சீப். அதற்காக இந்த இயக்கம் இல்லை. உயிர் மூச்சு என்று இருந்தால் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில்தான் இருப்பேன்












Click it and Unblock the Notifications