ஓரம்கட்டப்பட்டதால் உச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ் அணி... மீண்டும் வெடிக்கிறதா தர்மயுத்தம்?
அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டு வருவதால் உச்சகட்ட அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் அணி மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கலாம் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: அதிமுகவில் ஈபிஎஸ் அணியுடன் இணைந்த போதும் ஓபிஎஸ் அணி தலைவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் லேசாக இருந்த அதிருப்தி குரல் இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதால் அதிமுகவில் மீண்டும் ஒரு "தர்மயுத்தம்" நடைபெற வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
முதல்வர் பதவியில் இருந்து தம்மை ராஜினாமா செய்ய வைத்ததைக் கண்டித்து சசிகலாவுக்கு எதிராக திடுதிப்பென போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் தியானம் செய்துவிட்டு தர்மயுத்தத்தை தொடங்கியிருப்பதாக பிரகடனம் செய்தார் ஓபிஎஸ்.
ஆனால் சசிகலா, தினகரன் அடுத்தடுத்து சிறைகளுக்கு போக... டெல்லியின் நெருக்கடி அதிகரிக்க... ஓபிஎஸ் அறிவித்த தர்மயுத்தமும் சட்டென முடிவுக்கு வந்தது. அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன.
முக்கிய பொறுப்பு மறுப்பு
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. ஆனால் இந்த இணைப்புக்குப் பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்கு எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.
சாக்கு போக்கு சொல்லும் எடப்பாடியார்
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியாரிடம் பேசினால், அண்ணே தேர்தல் ஆணையம் முடிவு வந்துவிடட்டும்.. செய்துவிடுவோம் என்பதையே பதிலாக வைத்திருக்கிறராம். ஆனால் ஓபிஎஸ் தரப்போ, இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொண்டு நம்மை ஓரம்கட்டிவிடுவார்கள் என மிரண்டு போய் கிடக்கிறது ஓபிஎஸ் அண்ட் கோ.
பொங்கிய மைத்ரேயன்
இதனையே செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி, மைத்ரேயன் ஆகியோர் மறைமுகமாக புலம்பி வந்தனர். தற்போது மைத்ரேயன் பகிரங்கமாகவே அணிகள் இணைப்பால் மனங்கள் இணையவில்லை என நொந்து போய் பதிவிட்டு வருகிறார். அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடியாரை ஓபிஎஸ் அணியின் நத்தம் விஸ்வநாதன் கோஷ்டி வரவேற்கவும் இல்லை.
விரிசல் அதிகரிப்பு
இப்படியே ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியினரிடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் அதிமுகவில் இன்னொரு தர்மயுத்தம் வெடிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.