புதுச்சேரியிலும் இணைந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள்!
தமிழகத்தையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன. இதனையடுத்து புதுச்சேரி அதிமுக வரும் தேர்தல்களில் பரபரப்பாகச் செயல்படும் என்று கூறுகிறார்கள் அம்மாநில அதிமுகவினர்.
புதுச்சேரி: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. அதேபோல, புதுச்சேரி அ.தி.மு.க.வில் ஓம்சக்தி சேகர் தலைமையிலான ஓபிஎஸ் அணியும், புருஷோத்தமன் தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி அணியும் நேற்று இணைந்தன.
இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி அருகே உள்ள நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓம்சக்தி சேகர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகளை நேரில் வரவேற்றார்.

சபதம்
இணைப்பு நிகழ்வின்போது ' ஓம்சக்தி' சேகர் பேசுகையில், " புதுச்சேரி அ.தி.மு.க.வில் புருஷோத்தமன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி அணியும், எனது தலைமையில் ஓபிஎஸ் அணியும் செயல்பட்டன. இவை இரண்டும் தற்போது இணைந்துவிட்டன. ஜெயலலிதா எண்ணப்படி புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி அமையச் சபதம் ஏற்போம்" என்றார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
அதே போல மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் பேசுகையில், " எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓபிஎஸ் தலைமையிலான அணியும் இணைந்துள்ளதை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
Recommended Video


தீய சக்திகள்
ஜெயலலிதா தன்னந்தனியாக எம்.எல்.ஏ.க்களை உருவாக்கினார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை கட்டிக் காத்தார். அவர் உயிருடன் இருந்தவரை மக்களுக்காகவும், கட்சிக்காகவும் போராடினார். அதைச் சிதைப்பதற்காக சில சக்திகள் தமிழக ஆளுநரைச் சந்தித்துள்ளன. ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுக ஆட்சியைக் காக்கும். துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்" என்றார்.

கூட்டாக பணி
பின்னர், ஓம்சக்தி சேகர், புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இணைந்து செயல்படுவோம். சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து பணியாற்றுவோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications