அதிமுகவில் கரூர் மாவட்ட மா.செ விஜயபாஸ்கருக்கு கல்தா... ஓபிஎஸ் ஆதரவாளராம்!
சென்னை: கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்த விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் கடந்த சில வாரங்களாவே அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. யாருக்கு எப்போ என்ன நடக்குமோ என்று என்று ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அச்சத்துடனேயே வலம் வருகின்றனர்.
நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், கரூர் மாவட்ட கழகச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கரூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழகப் பணிகளை பி.தங்கமணி (நாமக்கல் மாவட்ட செயலாளர், தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்) கூடுதலாக மேற்கொள்வார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் தரவாளர்கள் களையெடுப்பு தொடர்கிறது. கரூர் மாவட்ட செயலாளர் பதவியை நேற்று ஜெயலலிதா பறித்தார். அவர் நீக்கத்துக்கான காரணம் என்ன என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்த செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிக்கப்பட்டது. சசிகலா மற்றும் அவரது ஆதரவாளரின் நெருக்கமானவராக திகழ்ந்ததால் முதல்வரை எளிதில் சந்திக்கும் நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வந்தார். முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலிலும் செந்தில் பாலாஜி இடம் பெற்றிருந்தார்.
நமக்கு மேல் ஒருவர் இருக்க கூடாது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். அதன் பின்னர் செந்தில்பாலாஜி மீது முறைகேடு தொடர்பான புகார்கள் வந்தது. இதை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகவே செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டது.
செந்தில்பாலாஜியின் பதவி பறிக்க முழுக்க, முழுக்க பன்னீர்செல்வம் காரணமாக திகழ்ந்தார். செந்தில்பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டதால் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் பி.தங்கமணி கூடுதல் பொறுப்பை சுமார் 2 மாதம் வகித்தார்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் தனது சமூகத்தை சேர்ந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிடித்து பன்னீர்செல்வம் மூலம் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்தார். இதற்காக ஒரு கோடி வரை பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தனக்கு கரூர் டவுன் தொகுதி கிடைக்க போகிறது என்று கூறி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்த தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டி வந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் களையெடுக்கும் பட்டியலில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் 5 மாதம் தான் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications