கோயிலில் யாகம்... 33 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!
அமைச்சர் பதவி நிலைக்க ஓ.எஸ்.மணியன் கோயிலில் யாகமும், 33 ஆடுகளைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்த விஷயம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தனது பதவி நிலைக்க கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் கோயிலில் யாகம் வளர்த்தும், 33 ஆடுகளை பலியிட்டு விருந்து நடத்தி நேர்த்திக்கடனும் செலுத்திய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு மழை வேண்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நேற்று வருண ஜெபம் நடைபெற்றது. கடும் வறட்சி நிலவுவதால் மழை வேண்டி யாகம் நடத்துவதாக கோயில் நிர்வாகத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து முன் கூட்டியே அறிவிக்காததால் பக்தர்கள் கூட்டமின்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூஜையை தொடங்கிவைத்து தரிசனம் செய்து விட்டுச் சென்றார்.

இதைத்தொடர்ந்து, தேத்தாக்குடி குழுந்தாளம்மன் கோயிலில் உள்ள முனீஸ்வரன் சன்னதியில் ஓ.எஸ்.மணியன் 33 ஆடுகளை பலியிட்டு பூஜை நடத்தினார். பின்னர் கட்சியினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து பல மாதங்களாகியுள்ள நிலையில், திடீரென இந்த யாகம் நடத்தப்பட்டது அமைச்சர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறவும்தான் அமைச்சர் இந்த யாகத்தை நடத்தியதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications