ஐபிஎல் போட்டிகளை பார்க்க எங்களுக்கும் பாஸ் கொடுங்க.. உதயநிதியிடம் கோரிக்கை வைத்த எஸ்.பி.வேலுமணி!
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ஃபீவர் சட்டமன்றத்திலும் தொற்றிக்கொண்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கவேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது. தற்போதும் 300 முதல் 400 பாஸ்கள் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை. எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்" என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.
இதேபோல, பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. எஎனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications