தத்தெடுத்த கிராமத்தை தத்தளிக்க விட்ட ஓ.பி.எஸ் ஆதரவு பெண் எம்.பி! பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
தங்கள் கிராமத்தை தானே தத்து எடுத்துக் கொண்டதாக அறிவித்த வனரோஜா இப்போது குடிநீர் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது கூட பார்க்க வரவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
திருவண்ணாமலை: கிராமத்தை தத்தெடுத்துவிட்டு அப்படியே அ.தி.மு.க எம்.பி கை கழுவிவிட்டதால் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்று திருவண்ணாமலை அருகே ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகேயுள்ள மேல்ராவந்தவாடி கிராமத்தை அதிமுக எம்.பி வனரோஜா தானாக முன் வந்து தத்தெடுத்தார். இதுகுறித்து மீடியாக்களில் செய்திகளும் வெளியானது.
வன ரோஜாவின் செயலுக்கு பல தரப்பிலும் அப்போது பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அத்தோடு கிராமத்தை கைவிட்டுவிட்டதாக வன ரோஜா மீது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கோடைக்காலம்
இப்போது கோடைக்காலம் துவங்கியுள்ளது. இந்த நிலையில், மேல்ராவந்தாடி கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மக்கள் குடிநீருக்காக அலைபாய்கிறார்கள்.
தண்ணீர் பஞ்சம்
பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீருக்காக அலையும் அவல நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மக்கள் கோபம்
இதனை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மிகவும் மதிப்பாக, தங்கள் கிராமத்தை தானே தத்து எடுத்துக் கொண்டதாக அறிவித்த வனரோஜா இப்போது குடிநீர் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது கூட பார்க்க வரவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
போலீசார் குவிப்பு
மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் போலீசார் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டனர். மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர் போலீசார்.
ஓ.பி.எஸ் குழு
திருவண்ணாமலை தொகுதி எம்.பியான வனரோஜா, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது குழுவிற்கு ஆதரவு தெரிவித்து அவரோடு இணைந்து செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.