காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இதோ ஒரு வாய்ப்பு.. தவற விடாதீர்கள்.. முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருந்தால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். நல்ல சமயம் இது என்பதால் நழுவவிடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உளப்பூர்வ எண்ணம், உறுதி முதல்வருக்கும் இருந்தால் முடிவெடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்வர் தர வேண்டும். காவிரி, நீட் பிரச்சனையில் தமிழக உரிமையை நிலை நாட்டுவதற்கான நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். லோக்சபாவில் திமுகவுக்கு எம்.பி.க்கள் இருந்திருந்தால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும்.
மாநில அரசின் நலனை நிலைநிறுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு எடுத்த முடிவை திமுக ஆதரிக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி வாரியத்தை மத்திய அரசு தாமதபடுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.