அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விரைவில் நீக்கம்? மவுனம் கலைக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விரைவில் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வைகை செல்வன் மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறார். செங்கோட்டையனை செல்வாக்கு இல்லாதவர்; அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை; செங்கோட்டையன் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பேசுவார் என்றும் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன். அதிமுக தலைமையை மீறி டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.
சென்னையிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என பாஜக அறிவித்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பிடி கொடுக்கவில்லை.
இதனால் அதிமுகவில் கலகத்தை பாஜக ஏற்படுத்தக் கூடும்; அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவாக செங்கோட்டையனை பாஜக களமிறக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செங்கோட்டையன் பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், செல்வாக்கில்லாத மனிதர் செங்கோட்டையன்; அவரைப் பற்றி எல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் மவுனம் கலைத்து விரிவாக பேசுவார் அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சிப் பிரச்சனையுமே இல்லை என்றார்.
செங்கோட்டையன் விவகாரம் என்ன?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்த்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அக்கட்சியின் சீனியர்களின் குரல். இதனை வெளிப்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியை புறக்கணித்தார் செங்கோட்டையன். அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி செங்கோட்டையன் பேசி வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார்.
இதனால் சட்டசபையில் செங்கோட்டையனை சந்தித்து அதிமுக தலைவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் செங்கோட்டையன் பாஜகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குழு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது என கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அமித்ஷா- நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இது தொடர்பான கேள்விக்கு, மவுனமே நல்லது என்று மட்டும் செங்கோட்டையன் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் அதிமுக தலைமை செங்கோட்டையன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications