எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும்.. தம்பிதுரை தடாலடி
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இது புரியாமல், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டால், ஆட்சியை பிடிக்கலாம் என திமுக பகல் கனவு காண்கிறது என தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர்: தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதி எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, வேடசந்தூரில் இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
அதிமுக முழு வலிமையோடு உள்ளது. எனவே தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இது புரியாமல், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டால், ஆட்சியை பிடிக்கலாம் என திமுக பகல் கனவு காண்கிறது.
அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும், அப்போது அதிமுக மேலும் வலுவடையும். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார். தனது தலைமையிலான அரசுக்கு 90 சதவீத கட்சியினர் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் பேசியிருந்த நிலையில், தம்பிதுரை, தேர்தல் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.