ஜெ., உடல்நலம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அப்பல்லோவில் சிகிச்சை... லண்டன் டாக்டர் வருகையில் மாற்றம்
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கில்நானி, நிதீஷ் நாயக், அஞ்சன் த்ரிகா ஆகியோர் கொண்ட குழுவினர் மீண்டும் அப்பல்லோவிற்கு வந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல்நிலையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே, லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். அவருடன் கடந்த 5ம் தேதி டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), அஞ்சன் த்ரிகா (மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர்), நிதிஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோர் இணைந்து கொண்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே நாடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் திரும்பி சென்றனர். அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக நேற்று எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்தனர்.
நேற்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று 2 மணி நேரத்துக்கு மேலாக சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள், மதியம் 3.50 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் வந்து சிகிச்சை அளித்தனர் இன்னும் 3 நாட்கள் இவர்கள் சென்னையில் தங்கியிருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என தெரிகிறது.
லண்டன் டாக்டர்
இதற்கிடையே, நேற்று இரவு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது பயண திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இன்று அவர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிச்சர்ட் பீலேவும் ஒரு சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார் என கூறப்படுகிறது.
பிரார்த்தனைகள்
கடந்த சில நாட்களாக அப்பல்லோவில் இருந்து அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. அடுத்த அறிக்கை வந்த பிறகுதான் முதல்வரின் உடல்நிலை பற்றி தெளிவாகும். முதல்வர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும், யாகங்களும் கோவில்களில் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications