நேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது.. சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
சென்னை: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் காத்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது என்று சிபிஐக்கு கார்த்தி வழக்கறிஞர் அருண் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் கடந்த 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி மறுத்துவிட்டார். தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சிபிஐ சம்மன் அனுப்ப முடியாது என கார்த்தி சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் சிபிஐ இதை ஏற்கவில்லை. கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது என்று அவரது வழக்கறிஞர் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது உத்தரவு வரும்வரை, அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீசை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.