ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிக்கும் ப.சிதம்பரம்?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் சிக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம் வழங்கவில்லை.
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.

ஆதாயமடைந்த கலாநிதி
இதன் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் பல ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் குற்றப்பத்திரிகை
தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் பெயர் முதலாவது குற்றப் பத்திரிகையில் இடம்பெறும் நிலையில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்யலாம் என்றும் திட்டமிடிருக்கிறதாம்.

கூடுதல் குற்றப்பத்திரிகை
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கவும் சிபிஐ திட்டமிட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன பிரச்சனை?
அதாவது மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல்லின் பங்குகளை வாங்கிய பின்னர் சன் டி.டி.எச்சில் அது முதலீடு செய்கிறது. அந்த முதலீட்டுக்கு அனுமதி கொடுத்தது முதலீடு வளர்ச்சி வாரியம்.
இந்திய சட்டங்களின் படி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தின் 74% பங்குகளைத்தான் வைத்திருக்க முடியும். ஆனால் மேக்ஸிஸோ 99.7% ஏர்செல் பங்குகளை வாங்கியதாக அறிவித்தது.

சிதம்பரத்துக்கு சிக்கல்
சட்டப்படி மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அனுமதி கொடுத்த முதலீட்டு வாரியம் நிதி அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மேக்ஸிஸ் முதலீடு செய்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். மேக்ஸிஸ் முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பான அத்தனை கோப்புகளையும் துருவி துருவி சிபிஐ ஆராய்ந்து கொண்டிருக்கிறதாம்..
வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தையும் சேர்த்துவிடுவது என்ற நிலையில் இருக்கிறதாம் சிபிஐ.












Click it and Unblock the Notifications