அஜித் vs விஜய் ரசிகர்கள்.. பொங்கல் தினத்தன்று தெறிக்கவிட தயாராகும் விஜய்டிவி
சென்னை: அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே நடைபெற்ற நீயா, நானா நிகழ்ச்சி, பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இறு நடிகர்களின் ரசிகர்களும் நிகழ்ச்சிக்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
ரஜினி, கமல்ஹாசன் ரசிகர்கள் நடுவேயான மோதல்கள், வாய்ச்சவடால்கள் 1990களில் உச்சம் தொட்டது. போஸ்டர்கள் மூலம், இந்த மோதல்கள் நடந்தன.
இந்த இணைய யுகத்திலும், நடிகர்களுக்கான மோதல்கள் மாறியபாடில்லை. ஆனால் நடிகர்களும், பிரச்சார ஊடகமும் மாறியுள்ளன.
அஜித், விஜய்
ரஜினி, கமலுக்கு பதிலாக தற்போது, அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்கள். சுவரொட்டிகளுக்கு பதிலாக டிவிட்டரும், பேஸ்புக்கும் இவர்கள் பிரச்சார ஊடகங்களாக மாறியுள்ளன.
மிக மோசம்
ஒருகட்டத்தில் இரு ரசிகர்களும் மிக மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் வசைபாடும் நிலைக்கு நிலைமை சென்றது. இந்த நிலையில், இரு ரசிகர்களையும் அருகருகே அமரச் செய்து நீயா, நானா நிகழ்ச்சி தனது டாக் ஷோவை நடத்தியுள்ளது.
நடிகர்கள் பற்றி கேள்விகள்
பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி காலை 9 மணிக்கு, விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உங்களுக்கு ஏன் அந்த நடிகரை பிடிக்கிறது, அபிமான நடிகர் படம் தோற்றுப்போகும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும், எப்படி சமாளிப்பீர்கள் என்று, இரு நடிகர்களின் ரசிகர்களிடமும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி கேள்விகள் கேட்டு பதில் வாங்கியுள்ளார்.
பரபரப்பு
அஜித் பற்றி உயர்வாக பேசும்போது அவரது ரசிகர்களும், விஜய் பற்றி பேசும்போது அவரது ரசிகர்களும், கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்கிறார்கள். இந்த விளம்பர காட்சிகளை பார்த்த அஜித், விஜய் ரசிகர்கள் இப்போதே சமூக தளங்களில் ஒருவருக்கொருவர் மீண்டும் வசைபாட தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சிக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.