காதலை ஏற்க மறுத்தாள்... எரித்துக்கொன்றேன்- இந்துஜாவை கொன்ற ஆகாஷ்
காதலை ஏற்க மறுத்து கேவலமாக பேசினாள், குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என்று இந்துஜாவை எரித்துக்கொன்ற ஆகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சென்னை: தனது காதலை ஏற்க மறுத்ததோடு குடும்பத்துடன் கேவலமாக பேசியதால் எரித்து கொன்று விட்டதாக இந்துஜாவை கொலை செய்த ஆகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள்கள் இந்துஜா, நிவேதா, மகன் மனோஜ்.
இந்துஜா பட்டதாரி பெண். இவரை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் காதலித்தார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இந்த காதலை இந்துஜாவின் பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தினார்கள். இதனால் மனம் மாறிய இந்துஜா ஆகாஷ் உடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம்.

ஆகாஷ் தொடர் தொந்தரவு
ஆகாஷ் விடுவதாக இல்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். வேலைக்கு செல்லும் போதும் ஆகாஷ் தொந்தரவு செய்யவே, எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார். நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்கு வந்த ஆகாஷ்
திங்கட்கிழமை இரவு இந்துஜா, அவரது தாயார், தங்கை, தம்பி அனைவரும் இருந்தனர். அவர்களிடம் இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். வேலையில்லாத உனக்கு எப்படி திருமணம் செய்து தருவது என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்கொலை மிரட்டல்
கொலை வெறியோடு டர்பன் டைன் ஆயில் கேனுடன் வந்திருந்த ஆகாஷ் தற்கொலை செய்வதாக மிரட்டவே, கதவை திறந்து வெளியே வந்தனர். உடனே கையில் வைத்திருந்த ஆயிலை இந்துஜா மீது ஊற்றினார். அதைப் பார்த்ததும் அனைவரும் அலறினார்கள்.

எரிந்து கருகிய இந்துஜா
யாரையும் வீட்டை விட்டு வெளியே விடாமல் அனைவர் மீதும் டர்பன் டைனை வீசினார். பின்னர் கையில் இருந்த லைட்டரால் தீயை கொளுத்தினார். உடலில் தீப்பற்றியதும் அனைவரும் கதறினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அதற்குள் இந்துஜா உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார்.

இந்துஜாவின் தம்பி
உயிருக்கு போராடிய தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் இந்துஜாவின் தம்பி மனோஜ் உயிர் தப்பினார்.

ஆகாஷ் வாக்குமூலம்
அங்கு தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்துஜாவை எரித்து கொன்றுவிட்டு ஆகாஷ் தப்பி ஓடினார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆகாஷையும் தேடிப் பிடித்து கைது செய்தனர். ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி பருவ காதல்
எனக்குப் பள்ளி பருவத்திலிருந்தே இந்துஜாவைத் தெரியும். அவர், படித்து ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், நான் வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தேன். சின்ன வயதிலிருந்தே இந்துஜாவை விரும்பினேன். 5 வருடமாக காதலித்தேன்.

ஒதுக்கிய இந்துஜா
அவரும் என்னை விரும்பினார். ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்க ஆரம்பித்தனர் இந்துஜா குடும்பத்தினர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டாள். வேலைக்கும் போகவில்லை. வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டாள் இந்துஜா. அவளை பார்க்காமல் என்னால் இருக்கமுடியவில்லை. அவளை மறக்க முடியாமல் தவித்தேன். அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அதை என்னால் தாங்க முடியவில்லை.

கேவலமாக பேசினர்
என் காதலை ஏற்றுக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். ஆனால், இந்துஜா மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் என்னைக் கேவலமாகப் பேசினர். எனக்குக் கிடைக்காத இந்துஜா இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதி அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீயை வைத்தேன் என்று கூறியுள்ளார்.

ஆகாஷ் கைது
ஆகாஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிவேதாவிடம் என்ன நடந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர்.

இறுதி சடங்கு
இந்துஜா உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. தாய் ரேணுகாவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் தீ காயங்கள் இருப்பதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெளிநாட்டில் உள்ள இந்துஜாவின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications