திரும்புகிறது 2001 ஆம் ஆண்டு! லோக்சபா தேர்தலில் போட்டி வேட்பாளர்களை இறக்குகிறார் அழகிரி?
சென்னை: திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்ட நிலையில் லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களம் இறக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவில் கருணாநிதியின் இளைய மகன் மு.க.ஸ்டாலின் தலையெடுக்க தொடங்கியது முதலே மூத்த மகன் மு.க. அழகிரியின் குடைச்சலும் தொடங்கிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மு.க.ஸ்டாலின் - மு.க. அழகிரி இடையேயான அதிகாரப்போட்டி பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுகவின் கட்சி கட்டுப்பாடுகளை மீறினார் என்பதற்காக அழகிரி, நீக்கப்படுவது இது முதல் முறையும் அல்ல. 2001ஆம் ஆண்டும் இதேபோல் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்த அழகிரியுடன் திமுகவினர் எவரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியது திமுக தலைமை.

என்ன குற்றச்சாட்டு?
"துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை விமர்சித்ததாகவும், கழகச் செயல்வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று அழகரி கூறியதாகவும்" தி.மு.க.விலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் குழப்பம் விளைவிக்க முயன்ற மு.க.அழகரி கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்பதாலும், அழகரி கட்சியில் நீடிப்பது கட்டுப்பாட்டைக் குலைத்து விடும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது.

அமைச்சர் பதவி போனது முதலே..
ஸ்டாலினுடனான மோதல் பத்தாண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்தாலும் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிய முதலே அழகிரி கட்சி தலைமைக்கு எதிராக 'பஞ்சாயத்து' செய்ய தொடங்கிவிட்டார்.

தாமதமாக ராஜினாமா
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிய போது மு.க. அழகிரி தாமதமாகவே ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் தலைவர்களையும் தனியே சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸில் ..
இதனால் அழகிரி திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸில் இணையக் கூடும் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. அண்மையில் கூட அழகிரி அளித்த சர்ச்சைக்குரிய பேட்டியில், மத்திய அரசில் இருந்து விலகுவது குறித்து தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று அழகிரி குறைபட்டது குறிப்பிடத்தக்கது.

மென்மை காட்டிய அதிமுக
அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் அழகிரியின் அத்தனை அடிப்பொடி விசுவாசிகளும் சிறைக்குப் போயினர். இதனால் அழகிரியும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிய விவகாரத்தில் அழகிரி திமுக தலைமையுடன் மோத தொடங்கியது முதல் அதிமுக அரசும் அழகிரியை மென்மையாகவே அணுகியது.

போலீஸ் பாதுகாப்பு
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அழகிரி ராஜினாமா செய்த பின்னரும்கூட அவருக்கான போலீஸ் பாதுகாப்பை அதிமுக அரசு தொடர உத்தரவிட்டு ஆச்சரியப்படுத்தியது.

அதிமுக கணக்கு
எப்படியும் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் உச்சகட்டம் அடையும்.. அதனால் லோக்சபா தேர்தலின் போது அழகிரி திமுக தலைமைக்கு எதிராக செயல்படுவார்.. இதை சாதகமாக்கினால் வெற்றி நிச்சயம் என்பதுதான் அதிமுகவின் அப்போதைய கணக்காக இருந்தது. அதனாலே மென்மையும் காட்டியது. இப்போது அந்த கணக்கு பலிக்கத் தொடங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கூட்டணியை உடைக்க முயற்சி..
இந்நிலையில்தான் திமுக- தேமுதிக இடையே நெருங்கி வந்த கூட்டணி உறவை உடைக்கும் விதமாக மு.க. அழகிரி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் உருப்படாது என்று காட்டமாக விமர்சித்தார்.

போஸ்டர் யுத்தம்
அத்துடன் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் திமுக தலைமைக்கு எதிராகவும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்புகளையே கூண்டோடு முதல் கட்டமாக கலைத்தது திமுக தலைமை.

அடுத்தடுத்து நீக்கம்
இதன் பின்னர் மு.க. அழகிரியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் செய்யப்பட்டனர். இதன் இறுதிக் கட்டமாக தற்போது மு.க. அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில்..
அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க. அழகிரி நீக்கப்பட்டுள்ளதால் அவர் அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிகவுக்காக பலி?
இருப்பினும் தேமுதிக- திமுக கூட்டணி அமைந்தால் அது வெற்றி அணியாக இருக்கும் என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில் இதற்கு முட்டுக் கட்டையாக இருந்ததாலேயே மு.க. அழகிரி வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.

உள்ளடி வேலை?
ஆனாலும் லோக்சபா தேர்தலில் உள்ளடி வேலைகளில் அழகிரி இறங்கிவிடக் கூடும் என்ற அச்சமும் திமுகவினரிடம் இருக்கிறது.

2001ல் ரகளை
2001ஆம் ஆண்டு இதேபோல் மு.க. அழகிரி போர்க்கொடி தூக்கிய போது திமுகவின் முப்பெரும் விழாவில் எவரும் கலந்து கொள்ள கூடாது என ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பேருந்துகளை எரித்தனர். இதனால் திமுகவினர் எவரும் அழகிரியுடன் தொடர்பு வைக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர்.

அழகிரி பேரவை ... போட்டி வேட்பாளர்கள்
அதன் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் திமுக தலைமைக்கு எதிராக 12 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார் மு.க. அழகிரி. அழகிரி பேரவை என்ற பெயரில் அவர் ஆதரவாளர்கள் தேர்தலில் இறங்கினர். இதனால் மூத்த திமுக தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உட்பட பல திமுக வேட்பாளர்கள் தோற்கவும் நேரிட்டது.

708 வாக்கில் தோற்ற பி.டி.ஆர்.
அழகிரி பேரவை என்ற பெயரில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டதால் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

தற்போதும் போட்டி வேட்பாளர்?
இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அழகிரி மீண்டும் நீக்கப்பட்டிருப்பதால் இத்தேர்தலிலும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி 'திராணியை' காட்டுவார் அழகிரி என்று கூறப்படுகிறது.

பாதிக்குமா?
இருப்பினும் 2001ஆம் ஆண்டு அழகிரிக்கு இருந்த செல்வாக்கு அதிகம். தற்போது திமுகவில் அழகிரிக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி ஒன்றும் இல்லை. அவரை ஆதரித்த பல தென் மாவட்ட செயலர்கள் இப்போது ஸ்டாலின் பக்கம்தான். இதனால் போட்டி வேட்பாளரை நிறுத்தினாலும் கவலை இல்லை என்கின்றனர் திமுகவினர்.
திக் திக் திமுக!












Click it and Unblock the Notifications